இஸ்கந்தார் புத்ரி, ஜன. 12 – சரக்கு கையாளுதல் மற்றும் துறைமுகத் துறையில் மலேசியாவுக்கு பெரும் ஆற்றல் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இங்குள்ள தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தின் (பி.டி.பி.) செயல்திறனை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், பி.டி.பி. சிறந்த செயல்திறனைக் கொண்ட மற்றும் உலகின் முதல் 15 துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது என்று சொன்னார்.
உலகின் 11வது இடத்தில் கிள்ளான் துறைமுகம் இருக்கும் நிலையில் கூடுதலாக, 15வது இடத்தில் பி.டி.பி. உள்ளது. மலேசியாவின் திறன் மிகவும் நன்றாக உள்ளதை இது மெய்ப்பிக்கிறது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, அவர் பி டி.பி யில் நடந்த “சந்திப்பு மற்றும் வாழ்த்து” நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் பி டி.பி. தலைவர் டான்ஸ்ரீ சே காலிப் முகமட் நோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக அளவில் முதல் 15 துறைமுகங்களில் ஒன்றாக இடம் பிடித்த பி டி பி.க்கு நன்றியையும் வாழ்த்துகளையும் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த வெற்றி நிச்சயமாக நல்ல திட்டமிடல், திடமான மற்றும் திறமையான நிர்வாகத்தின் விளைவாகும், இது அனைத்து பி.டி.பி. ஊழியர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் இல்லாமல் அடைய முடியாது என்று அன்வர் கூறினார்.
பி.டி.பி. உலகத் தரம் வாய்ந்த துறைமுக வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் பிராந்திய கடல்சார் தொழில்துறைக்கான சான்று மையமாகவும் செயல்படுகிறது என்று சே காலிப் ஒரு அறிக்கையில் கூறினார்.
பி.டி.பி. என்பது மலேசியாவின் பரபரப்பான கொள்கலன் பரிமாற்ற மையமாகும். இது 1,900 ஏக்கர் முனையம் மற்றும் 1,600 ஏக்கர் சுயேச்சை வாணிகப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இது பெரிய கப்பல் நிறுவனங்கள் மற்றும் கொள்கலன் நடத்துநர்களுக்கு சேவைகளை வழங்குகிறது என்று அவர் சொன்னார்.