ஈப்போ, ஜன 14- புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாமின் வீட்டில் தீ வைத்த சந்தேகிக்கத்தின் பேரில் நேற்று முன்தினம் ஷா ஆலமில் கைது செய்யப்பட்ட நபர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்று பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பா,ஸ்ரி தெரிவித்தார்.
அந்நபர் அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல. இந்த சம்பவத்திற்கான நோக்கத்தை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் முடிவுகள் இதுவரை காவல்துறைக்கு கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.
அந்த நபர் அதிகாலை 4.00 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு உதவுவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) வரை காவலில் வைக்கப்படுவார் என்றும் யுஸ்ரி கூறினார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறிய அவர், அந்நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 10) அதிகாலை டத்தோ ங்கே வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டின் தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.