செய்தி ; சு. சுப்பையா
கிள்ளான்.ஜன.20- இன்று கிள்ளான் செட்டியார் பாடாங்கில் மடாணி அரசாங்கத்தின் ஒற்றுமை பொங்கலுக்கு வருகை அளித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வறுமை ஒழிப்பதை தனது முதன்மை இலக்காகவும். அடுத்து பள்ளி, மருத்துவ வசதி, வியாபார வாய்ப்பு, சிறந்த கல்வி மேம்பாடு எனது இலக்கு என்று சூளுரைத்தார்.
ஒற்றுமையும் அமைதியும் அவசியம். நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருந்தால் நாட்டில் அமைதியாக நிலவும். அப்படிப்பட்ட தேசமே அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும். மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்க முடியும், வருமானத்தை உயர்த்த முடியும்.
அமைதியான ஆக்ககரமான ஆட்சியில் மட்டுமே மக்களும் , நாடும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதுவே கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு காண வழி அமைக்கும்.
வறுமை ஒழிப்பில் ஒரு சில இடங்கள் விடுபட்டிருக்கலாம், அல்லது பிரச்னைக்கு தீர்வு காண தாமதமாகி இருக்கலாம் ; குறிப்பாக சிலாங்கூரில் அப்படி விடுபட்டவர்களை அடையாளம் காணுங்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடினை கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டில் மட்டும் 8,600 பள்ளிகளின் கழிவறைகள் முறையாக சீரமைக்க பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
ஒற்றுமை துறை அமைச்சும் சிலாங்கூர் நிர்வாக சங்கமும் இணைந்து ஒற்றுமை பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் 1500 பேருக்கு மேல் வந்து கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு நாட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சியில் ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டகாங் கலந்துக்கொண்டார். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, ஒற்றுமை துறை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சிலாங்கூர் மாநில சபாநாயகர் லௌ வெங் சன், சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பராய்டு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பி.கே.ஆர் கட்சியின் 9 தொகுதி தலைவர்கள் மற்றும் அனைத்து இந்திய தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் , ஊராட்சி மற்றும் நகராண்மை உறுப்பினர்கள், இந்திய சமுதாயத் தலைவர்கள் என பெரும்பான்மையான இந்திய அரசியல் தலைவர்கள் திரண்டு வந்தனர்.
உலு சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர் டாக்டர் சத்தியா, பூச்சோங் பி.கே.ஆர் தலைவர் அன்பரசன், பாங்கி பி.கே.ஆர் தலைவர் பால முரளி மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி ஆகியோர் ஏற்பாடு வேலைகளை முன்னின்று கவனித்தனர்.