கோலாலம்பூர் ஜன 21- மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் கட்டிட நிதிக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது பலத்த கைதட்டலுக்கு இடையே அவர் இந்த அறிவிப்பை செய்தார்.
சோலை பாஸ்கரன் தலைமையில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் சொந்த கட்டிடம் வாங்கும் முயற்சியை பெரிதும் பாராட்டுகிறேன். இந்த முயற்சிக்கு எனது பங்களிப்பாக 30,000 வெள்ளியை வழங்குகிறேன் என அவர் அறிவித்தார்.
நமக்கு முன்னால் பல சவால்கள் உள்ளன. ஆகவே எதிர்காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.
டிஜிட்டல் மாற்றத்தில் இந்த அரசாங்கம் அதிக கவனமாக உள்ளது. நாடு எதிர்கொள்ள உள்ள சவால்களைச் சமாளிக்க டிஜிட்டல் அமைச்சை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைத்துள்ளார்.
சர்வதேச டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப இந்த நாட்டில் டிஜிட்டல் நுட்பம் வளர உதவும் முயற்சிகளில் டிஜிட்டல் அமைச்சு அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்படும். இது கடந்த கால மற்றும் தற்போதைய புதிய வணிக முறைகளை எதிர்காலத்தில் மாற்றும். தொழில்நுட்பம் அச்சுத் தொழிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆக, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதில் தொழில்துறையை ஒன்றிணைப்பதில் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் போன்ற இதர சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த அரசாங்கம் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் நாம் காணப்போகும் மாற்றங்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.