கிள்ளான், பிப் 14- காப்பார், கம்போங் தோக் மூடாவில் நேற்று பிற்பகல் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் மீது இன்று கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இத்தகவலை பெர்மானாவிடம் நேற்றிரவு உறுதிப்படுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், சவப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் விளக்கமளிப்பர் என்றார்.
அந்த விமானத்தின் விமானியான டேனியல் யீ ஸியாங் கூன் (வயது 30) மற்றும் உதவி விமானியான ரோஷான் சிங் ரைனா (வயது 40) ஆகிய இருவரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளது ஆவணப் பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹூசேன் கூறியிருந்தார்.
நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தின் போது அவ்விரு விமானிகளும் செம்பனைத் தோட்டம் ஒன்றில் கோக்பிட் எனப்படும் விமானியின் அறையுடன் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் புதையுண்டனர்.
சமார் 1,300 கிலோ எடை கொண்ட அந்த பி.கே.160 கேப்ரியல் ரக விமானத்தை ஏர் எட்வெஞ்ர்ஸ் ஃபிளையிங் கிளப் நிறுவனம் சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து இயக்கி வந்தது.