ஷா ஆலம் பிப் 15 ;-சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு, கிள்ளான் செந்தோசா ஸ்ரீ மகா காளிகாம்பாள் ஆலயம் மற்றும் போர்ட் கிள்ளான் ஆற்றோரம் ஸ்ரீ காளியம்மன் கோவில்களின் நில விவகாரம் மீது கிள்ளான் மாவட்ட நில அலுவலகம், மற்றும் கிள்ளான் மாநகராட்சியுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மேற்படி ஆலயங்கள் ஒன்றின் நில மேம்பாட்டாளர் கிளான்மேரி கேவ் நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்துரைத்த மாண்புமிகு பாப்பா ராய்டு இவ்வாலயங்களின் நில பிரச்சனைகள் நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் இருப்பதால் அதற்கு விரைவாக நல்ல தீர்வு காண இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.