கோத்தா கினபாலு, ஏப் 7- இன்று காலை 8.30 மணியளவில் குனாக் கடல் பகுதியில் ‘பாகார் லாவுட்’ எனும் சிறப்பு நடவடிக்கை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடல்சார் அமலாக்க நிறுவன உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காயினர்.
சம்பவத்தின் போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடல்சார் அமலாக்க நிறுவன உறுப்பினர்கள் சந்தேகத்திற்கிடமான படகை நெருங்க முயற்சிக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக மெரிடைம் சபா மற்றும் கூட்டரசு பிரதேச இயக்குநர் முதலாம் அட்மிரல் டத்தோ சே எங்கு சுஹைமி சே எக்கு டாயிக் கூறினார்.
அந்தப் படகை அணுகியபோது, படகில் இருந்ததாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்கள் மெரிடைம் மலேசிய உறுப்பினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு சர்வதேச கடற்பகுதியை நோக்கி வேகமாகச் சென்று விட்டதாக அவர் இன்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
காயமடைந்த உறுப்பினர்கள் சிகிச்சைக்காக குனாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனது தரப்பு விசாரித்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்றும் சே எங்கு சுஹைமி கேட்டுக் கொண்டார்.