கோலாலம்பூர், மே 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அல்பெர்ட் மற்றும் கூகுளின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட்டுடன் நேற்று இயங்கலை வாயிலாக மாநாட்டை நடத்தினார்.
கடந்தாண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த மாநாடு அமைந்தது என்று
நிதியமைச்சருமான அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
அரசாங்கத்தின் தொலை நோக்கு திட்டம் மற்றும் இலக்கு குறித்த பிரதமரின் முந்தைய விளக்கத்தின் அடிப்படையில் மலேசியாவில் விரிவாக்கக்கூடிய துறைகளின் செயல் திட்டங்களின் மேம்பாடு குறித்து ரூத் விவரித்தார்.
கடந்த சந்திப்பிலிருந்து மலேசிய அரசாங்கம் வழங்கி வரும் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் பணிகை எளிதாக்குவதற்கான வேகத்தை அல்பெர்ட் மற்றும் கூகுள் மிகவும் வரவேற்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தையும் இந்த கலந்துரையாடலில் தாங்கள் தொட்டதாகப் பிரதமர் கூறினார்.
இந்த முயற்சிகள் யாவும் இறுதியில் எந்தவொரு சமூகக் குழுவையும் கைவிடாமல் குறிப்பாக தொழில்நுட்ப கல்வியறிவின் அடிப்படையில் விரிவான பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டு வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக நாட்டின் தொழில்நுட்ப மாற்றத் திட்டத்தைத் தொடங்குவதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்த முயற்சி பலனளிக்கும் என்று தாம் பெரிதும் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகமான மலேசியர்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான விவேகப் பங்காளித்துவத்தை மலேசிய அரசாங்கமும் கூகுளும் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தன.