ஈப்போ, மே 25- மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் 262.5வது கிலோ மீட்டரில் சபாக் பெர்ணமிலிருந்து சங்காட் ஜெரிங் செல்லும் தடத்தில் நேற்றிரவு நிகழ்ந்த இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகினர்.
பெரேடுவா பெஸ்ஸா மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் நேற்றிரவு 11.11 மணியளவில் தங்களுக்குத் தகவல்
கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி காரின் பயணியான ஒரு பெண்மணியும் பெரேடுவா பெஸ்ஸா காரிலிருந்த கணவன்-மனைவியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
அம்மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இவ்விபத்தில் காயமடைந்த ஐந்து சிறார்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட அறுவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
விபத்தில் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.