கோலாலம்பூர், ஜூன் 26- சுமார் 27- அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டாவுக்கு விண்ணப்பம் செய்வதற்காக போலி தொழிலாளர் ஒப்பந்தங்களைச் சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
சுமார் 7 கோடியே 70 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட அந்த மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் நேற்று மாலை 6.00 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்த போது தடுத்து வைக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.
நான்கு நிறுவனங்களை உட்படுத்திய அந்த மோடிசயில் அந்த முன்னாள் நிர்வாகி தவிர்த்து மேலும் ஏழு இயக்குநர்களும் சம்பந்தப்பட்டுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் அந்நியத் தொழிலாளர்களுக்கான கோட்டா ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு மனிதவளத் துறையிடம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த தாகக் கூறப்படும் இந்த மோசடியில் 7 கோடியே 70 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 25 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கைதான அனைவரும் நேற்று தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை எம்.ஏ.சி.சி.யின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு முதன்மை இயக்குநர் டத்தோ அஸ்மி கமாருள்ஸான் உறுதிப்படுத்தினார்.
இந்த மோசடி தொடர்பில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விசாரணைக்கு உதவ மேலும் பலரைத் தாங்கள் தேடி வருவதாக தெரிவித்தார்.