தைப்பிங், ஜூலை 8- இணையத் வலைத்தளங்களில் நிகழும் மோசடிகளைத் தடுப்பதற்காக புதிய சட்டத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு 2010ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் (சட்டம் 709) செய்யப்படவிருக்கும் திருத்தம் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என இலக்கவியல் அமைச்சு உறுதியளித்துள்ளது.
இவ்விரு சட்டங்களும் நுட்ப மற்றும் சட்ட அமலாக்க கோணங்களில் முற்றிலும் மாறுபட்டவை என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
தனிநபர் தரவுகள் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படுவதை உறுதி செய்வதை சட்டம் 709இல் செய்யப்படும் திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவு மீறல் அல்லது ஊடுருவல் நிகழ்ந்தால் அது குறித்த முன்னறிவிப்பை சம்பந்தப்பட்ட பங்களிப்பாளர்கள் கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்வதற்கான சட்ட விதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
அதே சமயம், புதிதாக உருவாக்கப்படவுள்ளச் சட்டம் தனிநபர்களைப் பாதிக்கக் கூடிய இணைய மோசடிகளை தடுப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சட்ட ரீதியான கோணத்தில் மாறுபட்டுள்ளதை நாம் காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ குரு சிங் சாஹ்பா அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற தைப்பிங் பாரம்பரிய நகரின் 150வது நிறைவு விழா விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
சட்டம் 709ஐ ஒருங்கிணைக்கும் மற்றும் அமல்படுத்தும் அதிகாரம் டிஜிட்டல் அமைச்சின் கீழ் இருக்கும் எனக் கூறிய அவர், புதிதாக உருவாக்கப்படவுள்ள சட்டம் தொலைத் தொடர்பு அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சின் ஒத்துழைப்பில் அமலாக்கம் காணும் என்றார் அவர்.
மாறுபட்டச் சட்டங்களைக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் புகார்கள் மீது நாங்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்போம். எந்த புகாரை எந்த அமைச்சு கவனிக்கும் என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.