ஷா ஆலம், ஜூலை 20- புதிய மதிப்பீட்டு வரி தொடர்பான 326,646 தகவல் அறிக்கைகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தனது அதிகார வரம்பிற்குற்பட்ட பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை 15ஆம் தேதி வரை சொத்து உரிமையாளர்களிடமிருந்து 2,492 ஆட்சேபனைகளை தாங்கள் பெற்றுள்ளதாக மாநகர் மன்றத்தின் தொடர்பு வர்த்தகப் பிரிவு கூறியது.
இந்த ஆட்சேபனைகள் 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் (சட்டம் 171) 142வது பிரிவின் கீழ் அனுப்பப்பட்டன. மாநகர் மன்றம் இந்த மதிப்பீட்டுப் பட்டியலை வரும் ஆகஸ்டு 16ஆம் தேதி தொடங்கி மறுஆய்வு செய்யும்
பின்னர் நடைபெறவிருக்கும் ஆட்சேபங்களைக் கேட்டறியும் நிகழ்வில் சொத்து உரிமையாளர்கள் முன்வைக்கும் மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிரான கருத்துகள் விசாரிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
சுபாங் ஜெயா/யுஎஸ்ஜே பகுதியிலுள்ள சொத்து உரிமையாளர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான அதாவது 171 ஆட்சேபனைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பண்டார் புத்ரா பெர்மாய் (574), பூச்சோங் (402), கின்ராரா (301), ஸ்ரீ கெம்பாங்கன் (210) ), புத்ரா ஹைட்ஸ் (145) மற்றும் சுபாங் ஹைடெக் (109) ஆகிய பகுதிகள் உள்ளன.
புதிய மதிப்பீட்டு பட்டியல் மறுஆய்வு முகப்பிடம் லாமான் கெனாங்கா முதல் மாடி, சுபாங் ஜெயா மாநகர் மன்றம், பெர்சியாரன் பெர்பாடுவான், யுஎஸ்ஜே 5, 47610 சுபாங் ஜெயா எனும் முகவரியில் ஆகஸ்டு 2ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
மதிப்பீட்டிற்கான ஆட்சேபனைகளை மாநகர் மன்ற இணையதளம் மூலமாக அல்லது https://bantahan.mbsj.gov.my என்ற இணைப்பில் ஆகஸ்டு 2ஆம் தேதிக்கு முன்பாகவோ தெரிவிக்கலாம் .
மேலும் தகவலுக்கு பொதுமக்கள் மாநகர் மன்றத்தின் சொத்து மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் துறையை 03-8026 3115, 03-8026 4345, 03-8026 7428 மற்றும் 03-8026 4340 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.