புத்ராஜெயா: அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப இலக்கு 130,000 தை விஞ்சி, இந்த ஆண்டு ஜூன் வரை திவால் துறையால் மொத்தம் 142,510 பேர் திவால் நிலையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளதற்கு, திவால் துறைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திவாலான நபர்களுக்கு உதவுவதில் கிடைத்த வெற்றிக்குக் காரணம், திவாலானவர் திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் சட்டத் திருத்தங்கள், இதில் குறைந்த பட்சக் கடன் வரம்பை RM50,000 லிருந்து RM100,000 ஆக உயர்த்தியது என்றார்.
“தங்களின் எதிர்காலம் தெரியாமல் தவிக்கும் இந்த 1,40,000 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுக்கு, இது நிச்சயமாக பெரிய விடிவாக இருக்கும், அது அவர்களுக்கு பெரிய உதவியாவதுடன், வளர்ச்சிக்கும் உதவும்” என்று நேற்று திவால் துறையின் 100வது ஆண்டு விழாவின் போது பிரதமர் அன்வார் கூறினார்.
புத்ராஜெயா இந்த ஆண்டு திவால் நிலையிலிருந்து 130,000 பேரை விடுவிக்க திவால் துறைக்கு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் 142,510 பேரை திவால் துறை விடுவித்தது புத்ராஜெயாவுக்கு இது ஒரு முன்னோடியில்லாத வெற்றி என்றும் அன்வார் கூறினார்.
“அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று எண்ணி மக்கள் எப்பொழுதும் கவலைப்படுகிறார்கள். ஆனால், இது உண்மையல்ல. “1957 ம் ஆண்டு மெர்டேக்காவுக்கு பின் இதுவரை, 142,000 திவாலானர்களின் இன்னல் தீர்க்கும் திறன் கொண்ட எந்த அரசாங்கமும் இருந்ததில்லை பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசை தவிற,” என்று அவர் கூறினார்.
திவால் துறையின் இலக்கை மீற முடிந்ததால், நேர்மறையான ஆச்சரியங்கள் இருக்கும் என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
“அரசு அமைப்புகளை நெறிப்படுத்துவது வழி அதன் செயல் திறனை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். “திவாலானவர் திணைக்களத்தின் சிறந்த பங்குக்கு, அதன் செயல் திறனுக்காக நிச்சயமாக அத்துறை மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.