ஷா ஆலம், ஆக 3- கடந்த சனிக்கிழமையன்று ஏயு5 லெம்பா கிராமட், மேடான் செலேராவில் ஏற்பட்டத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 12 வர்த்தகர்களுக்கு தற்காலிமாக வர்த்தகம் புரிவதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த உணவு விற்பனை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் வணிகத்தைத் தொடர அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று உலு கிளாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
தற்காலிக கூடாரம், நீர் விநியோகம் மற்றும் குப்பைத் தொட்டிகளை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வேளையில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வணிகம் புரிய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அவர்களுக்கு சில மாதங்களுக்கு வாடகை விலக்களிப்பை வழங்குவது நகராண்மைக் கழகத்தின் விவேகத்திற்குட்டது உட்பட்டது என்று சொன்னார்.
முன்னதாக, நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது மற்றும் அம்பாங் தீயணைப்புத் துறையினரின் ஏற்பாட்டில் லெம்பா கிராமட், ஏயு 5 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு விற்பனை வளாகத்தின் புதிய கட்டுமானத் திட்டத்தை நகராண்மைக் கழகம் ஆய்வு செய்து வருகிறது என்று ஜூவாய்ரியா கூறினார்.
கடந்த சனிக்கிழமை ஏயு 5 லெம்பா கிராமட், மேடான் செலேராவில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 கடைகள் சேதமடைந்தன. கடைகளில் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை