கோலாலம்பூர், ஆக 11- போலீஸ் ரோந்துக் காரை மிகவும் மூர்க்கத்தமான மோதிய நான்கு சந்தேகப் பேர்வழிகள் பயணம் செய்த இரு கார்கள் மீது காவல் துறையினர் ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவம் பலாக்கோங் அருகிலுள்ள ஜாலான் பெக்கான் பத்து 11இல் நேற்று அதிகாலை 6.05 மணியளவில் நிகழ்ந்தது.
மின்சார கேபிள் திருட்டுக்கு எதிராக சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்த காஜாங் மாவட்ட காவல் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவுச் சேர்ந்த ரோந்து வாகனத்தை நிசான் புரோண்டியர் மற்றும் பி.எம்.டபள்யு. ரக வாகனங்கள் வேண்டுமென்ற மோத முயன்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களின் அவ்விரு கார்களின் டயர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் போலீசாருக்கு ஏற்பட்டது. அக்காரிலிருந்த 28 முதல் 36 வயது வரையிலான நான்கு ஆடவர்கள் வெற்றிகரமாக மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனினும், இந்த சம்பவத்தில் போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், கைதான அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் பொருள் உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பான பல முந்தைய குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது முதல் கட்டச் சோதனையில் தெரிய வந்துள்ளது என்றார்.
அக்கார்களில் கேபிள்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல உபகரணங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தண்டனை சட்டத்தின் 307 மற்றும் 379/511 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.