ஷா ஆலம், ஜூன் 6:
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி உடனடியாக பிரதமரின் வங்கி கணக்கில் இருந்து டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் ரிம9.5 மில்லியன் மாற்றியதாக கூறப்படும் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது. 9.5 மில்லியன் பிரதமர் வங்கி கணக்கில் இருந்து ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக கூறப்படும் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறையில் சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் மாண்புமிகு சுஹாய்மி ஷாஃபியி மற்றும் துணைத் தலைவர் கு.குணசேகரன் தலைமையில் புகார் செய்யப்பட்டது.
மேலும், பிரதமர் நஜிப் அவருக்கும் வழக்கறிஞர் ஷாஃபிக்கும் அப்படி என்ன தனிப்பட்ட தொடர்பு இருப்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மந்திரி பெசாரின் அரசியல் செயலாளருமான சுஹாய்மி வலியுறுத்தினார். சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த பண மாற்றம் ஏம் பேங்க் உரிமையாளர் ஹுசேன் அமாட் நஜாடி கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் மற்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு நடந்த சமயத்தில் பட்டுவாடா செய்தது குறிப்பிடத்தக்கது.
” நேர்மையான மற்றும் நீதியான விசாரணை நடத்த காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் நஜிப்பாக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப் பட வேண்டும்,” என்று தன்னுடன் மேலும் ஒன்பது புகார்களை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
சுஹாய்மி மேலும் கூறுகையில், காவல்துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து செக்சன் 405 குற்றவியல் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
” 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் இதில் தொடர்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விசாரணை ஊழல் தடுப்பு ஆணையம் 2009-இன் கீழ் செக்சன் 17 உட்பிரிவு (a) படி பொது மக்கள் நிதி மோசடி வழக்காக பதிவு செய்யலாம்,” என்று கூறினார்.
கடந்த மே 31 அன்று சரவாக் ரெப்போட் ரிம4.3 மில்லியன் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக குற்றம் சாட்டியது. இந்த பரிமாற்றம் ஹுசேன் அமாட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரிம 5.2 மில்லியன் பணம் பிப்ரவரி 17 2014-இல் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும், இந்நேரத்தில் அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்கு நடைபெற்ற சமயம் என சரவாக் ரெப்போட் கூறுகிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கம் ஷாஃபி அப்துல்லாவை அன்வார் இப்ராஹிம் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது ஆகும்.