புத்ரா ஜெயா, ஏப்.29:
30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளை பரிசோதனையிட அல்லது மாற்று வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்வது குறித்து மாநில அரசாங்கத்துடன் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு (கேபிகேடி) பேச்சு வார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற வீடமைப்பு பகுதிகளை சோதனையிடுவது மற்றும் மறு நிர்மாணிப்பு செய்வது தேசிய வீடமைப்பு கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.
“தாமான் கெராமாட் பெர்மாய் வீடமைப்புத் திட்டமானது சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது” என்றார்.
“இந்த விவகாரத்தை அமைச்சு கண்காணிப்பதோடு வழங்கக்கூடிய உதவி குறித்தும் பரிசீலிக்கும். இந்தப் பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிடுவேன்” என்று தாமான் கெராமாட் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 40 வீடுகளில் இருந்து 222 குடியிப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து பேசுகையில் ஜூரைடா குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்களில் வெடிப்பு காணப்பட்டதோடு இக்கட்டடம் சற்று சாய்வாக இருந்ததைக் கண்ணுற்றவுடன் அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.