ஷா ஆலம், ஜூன் 4-
செத்தியா ஆலமில் பழுதடைந்த குடிநீர் குழாய் இன்று காலை 4 மணி அளவில் முழுமையாக சீர்படுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பி வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் நிர்வாக தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.
குடிநீர் விநியோகம் விரைவாக சீரடைவதை உறுதிப்படுத்த குழாயின் காற்றழுத்தம் மீது தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார். இதனிடையே, குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் வரையில் லாரி மற்றும் டாங்கி மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோக சேவை தொடரும் என்றார் அவர்.