கோலாலம்பூர், ஜூன் 10-
நாட்டை தூய்மைக்கேடாக்கும் சட்டவிரோத நெகிழி பொருட்கள் இறக்குமதி நடவடிக்கையை ஒரு சாதாரண விவகாரமாகப் பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் நாட்டிற்குள் 157,299 டன் நெகிழி பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 273 விழுக்காட்டு அதிகமாகும்.
அதே வேளையில், நாடு முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் நெகிழி கழிவுப் பொருட்கள் அழிக்கும் சட்டவிரோத பகுதிகள் புதிதாக அமைக்கப்பட்டன. பேராவில் ஈப்போ, கெடாவில் சுங்கைப் பட்டாணி, சிலாங்கூரில் ஜெஞ்ஜாரும் உட்பட மேற்கு துறைமுகத்தில் உள்நாட்டு இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்ட 60க்கும் மேற்பட்ட கொள்கலன்களில் நெகிழி கழிவுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 60 கொள்கலன்களில் 3,000 மெட்ரிக் நெகிழி கழிவுப் பொருட்கள் இருந்ததாகவும் அவற்றை ஏற்றுமதி செய்த நாட்டிற்கே திரும்ப அனுப்பப்பட்டதாகவும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின் கூறினார்.
இதனிடையே, ஆண்டொன்றுக்கு 30 பில்லியன் வெள்ளியை ஈட்டும் இந்த நெகிழி கழிவுப் பொருட்களை தயாரிக்கும் தொழில்துறையை நாடு அலட்சியப்படுத்த முடியாது என்று கடந்தாண்டு இறுதியில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறியிருந்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?