கிள்ளான், டிச.11-
மாநில நிர்வாக முறையில் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று மாநில அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அரசியல் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்களின் பிரச்னைகளைப் பார்வையிடுவதோடு மக்களின் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் அறைகூவல் விடுத்தார்.
நாள்தோறும் அதிகரித்து வரும் பொருட்களின் விலையேற்றத்தாலும் வாழ்க்கைச் செலவினங்களாலும் மக்கள் தற்போது அவதியுற்று வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களோடு களத்தில் இறங்கி அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அதோடு குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் ஏழைகளுக்கு உதவ கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளரின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி இஸ்தானா ஷா ஆலமில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியின் போது சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா உரை நிகழ்த்தினார்.