ஷா ஆலம், டிசம்பர் 14:
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து செயல்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது என சிலாங்கூர் மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி தெரிவித்தார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மக்களின் நல்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் என்று அவர் விவரித்தார்.
” தற்போதைய பாக்காத்தான் அரசாங்கம் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது, ஆனாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. மத்திய அரசாங்கம், முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் முறைகேடாக பயன் படுத்தப்பட்ட நிதிகளை மீண்டும் கொண்டு வர பாடுபட்டு வருகிறது,” என்று கொண்கோர்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற கோலா சிலாங்கூர் தலைவர்களுடன் நடத்திய விருந்து நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் இவ்வாறு அப்துல் ரஷிட் பேசினார்.
முதல் முறையாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி கடந்த பொதுத் தேர்தலில் கடினமாக உழைத்த கட்சியின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் நிகழ்வு என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெராம் சட்ட மன்ற உறுப்பினர் சைட் ரொஸ்லி, புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற உறுப்பினர் ஜூவாரியா ஸூல்கிப்லி மற்றும் 200-க்கும் மேற்பட்ட கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.