புத்ராஜெயா, ஏப்ரல் 6:
மலேசியாவில் மிக தீவிரமாக பரவி வரும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பொது மக்களை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வைரஸ் அபாயத்தை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பாடுகள் மூலம் எதிர் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
” மலேசிய மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் இந்த நோயை எதிர் கொள்ள முடியாது. இந்த கடுமையான காலகட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பிகேபி நடவடிக்கையை அரசாங்கம் அமல்படுத்த காரணம் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கவே ஆகும். ஆகவே, பொது மக்கள் காவல்துறை வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்,” என்று புத்ராஜெயாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு முஹீடின் யாசீன் பேசினார்.