கோலாலம்பூர், ஜூலை 5-
தாங்கள் சட்டப்பூர்வ சமய அமலாக்க அமைப்பினர் அல்லர் என்பதால் நாட்டின் சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று பாடார் தரப்பினரை தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கேட்டுக் கொண்டார்.
எவ்வித அமலாக்க நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு இந்த அமைப்பினருக்கு அதிகாரம் இல்லை என்று மஸ்லான் தெரிவித்தார்.
“மலேசிய சங்க பதிவக துறையில் பதிவு செய்யாத எந்தவோர் அமைப்பும் சட்டவிரோத அமைப்பாக கருதப்படும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்களிடையே ஒழுங்கீன நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க இந்த அமைப்பு மீண்டும் துடிப்புடன் செயல்படுவதோடு இதன் நடவடிக்கைகள் நாடு முழுமையும் விரிவுபடுத்தப்படும் என்று பாடார் இயக்கத்தின் தலைவர் அஸஹார் முகமது வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து மஸ்லான் இவ்விதம் கருத்துரைத்தார்.