கிள்ளான், அக்.25-
இன அரசியலை புறம் தள்ளிவிட்டு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த தீபாவளி கொண்டாட்டத்தை மலேசிய மக்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன அரசியலானது நாட்டு மக்களை ஆங்கிலேயர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரித்தாளும் கொள்கைக்கு இட்டுச் செல்லும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“உண்மையில் மலாய்க்காரர்களில் பூர்வீக இடம் இதுவாகினும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறிய சீனர்களையும் இந்தியர்களையும் பேதப்படுத்தி பேசிக் கொண்டிருந்தால், நாம் எப்போதும் பிரிந்தே இருப்போம். பிரித்தாளும் கொள்கையை அமல்படுத்தியே ஒரு காலத்தில் மலாயாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர்” என்று அவர் நினைவுறுத்தினார்.
இங்கு ஜாலான் தெங்கு கிளானாவில் நேற்றிரவு கிள்ளான் நகராண்மை கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி கலை நிகழ்ச்சியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்.