செலாயாங், மார்ச் 11-
ஸ்ரீ கோம்பாக்கில் அனுமதியின்று உணவகத்தின் ஐந்தடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை செலயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) பறிமுதல் செய்தது. 16 அமலாக்க அதிகாரிகளை உள்ளடக்கிய அச்சோதனை நடவடிக்கையின்போது 15 மேசைகள், 9 அங்காடி கூடாரங்கள் மற்றும் 22 வர்த்தக பரிவர்த்தனை புத்தகங்கள் பறிமுதல் செய்ய்யப்பட்டதாக முகமது ஜின் மாசோட் கூறினார்.
“பொது இடங்களில் உணவு மேசைகளை வாடிக்கையாளர்களுக்காக அமர்த்துவதால் சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுவதைத் தொடர்ந்து கட்டடம் மற்றும் கால்வாய் சட்டப்பிரிவு 46(1) கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார் அவர்.
“இது போன்ற சம்பவம் இங்கு ஐந்தாவது தடவையாக நடைபெற்றிருப்பதால் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளரின் உரிமத்தை பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
இதனிடையே, உணவங்களின் ஐந்தடிப் பகுதிகளில் இடையூறுகளை ஏற்படுத்துவது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதர உணவக உரிமையாளர்களும் இதைக் கருத்தில் கொள்ளும்படி அவர் நினைவுறுத்தினார்.