ஷா ஆலம், மார்ச் 18-
கோவி-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதன் ஆகக் கடைசி நிலவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இணைய வழியிலான தகவல் அகப்பக்கம் ஒன்றை சிலாங்கூர் மாநில அரசு தயார் செய்துள்ளது.
இந்த தொற்று குறித்த ஆகக் கடைசி தகவலை மக்கள் https://amirudinshari.com/covid-19 என்ற அகப்பக்கத்தை வலம் வந்து அறிந்து கொள்ளலாம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த அகப்பக்கம் வழி கோவிட்-19 குறித்த ஆகக் கடைசியான தகவல் மற்றும் மாநில அரசின் அறிவிப்புகளையும் அறிந்து கொள்ளலாம் என்று அமிருடின் தனது கீச்சகம் வழி கூறினார். முன்னதாக, கோவிட்-19 நிலவரத்தை கண்காணிப்பதற்காக மாநில அரசாங்கம் கடந்த மார்ச் 10ஆம் தேதி கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை மன்றம் ஒன்றை முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அகமதுவின் தலைமையில் தோற்றுவித்தது.
இம்மன்றத்தில் டத்தோ டாக்டர் கிறிஸ்தோபர் லீ குவோக் சூங், பேராசிரியர் டத்தோ டாக்டர் அடீபா கமருல்ஸாமான், டத்தோ டாக்டர் ஃபட்ஸில்லா கமாருடின், பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் மற்றும் டாக்டர் யாப் வெய் ஆன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.