ஷா ஆலம், ஏப்.1-
கோவிட்-19 தொற்று கண்டவர்களை அடையாளம் காணும் வகையில் சுங்கை லுய், உலு லங்காட்டில் உள்ள 3 கிராம மக்கள் மீது மலேசிய சுகாதார அமைச்சு ஆய்வு நடவடிக்கையை இன்று தொடக்கியுள்ளது.
அமைச்சின் 8 அதிகாரிகள் மற்றும் 53 போலீஸ்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்நடவடிக்கை முழுமைப் பெற 3 நாட்கள் ஆகும் என காஜாங் போலீஸ் படைத் தலைவர் ஏசிபி அகமது முகமது யூசோப் கூறினார்.
இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படும் குடியிருப்பாளர்கள் கிளினிக் டேசா சுங்கை லூயில் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று பெரித்தா ஹாரியான் நாளேடு தெரிவித்தது.
இங்குள்ள பத்து 21 தொடங்கி பத்து 24 வரையிலான அனைத்து கிராமங்களிலும் கடந்த மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 14 வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பத்து 23 கிராமத்தில் உள்ள மாஹாட் தாஹ்ஃபிஸ் வசிக்கும் 274 குடியிருப்பாளர்களில் 71 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆணை அங்கு பிறப்பிக்கப்பட்டது.அதனை அடுத்து அங்குள்ளவர் வீட்டை விட்டு வெளியேறவும், வர்த்தகம் புரியவும் அனுமதி மறுக்கப்பட்டது.