ஷா ஆலம், ஏப்ரல் 22:
சிலாங்கூர் மாநிலத்தில் உலு லங்காட் மாவட்டம் மட்டுமே இன்னும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட சிவப்பு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மாநில பேரிடர் நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம் தெரிவித்தது. இது நேற்று நண்பகல் 12 வரை 52 நபர்களுக்கு இன்னும் தொற்று நோய் உள்ளது என அது வர்ணித்தது.
நேற்றைய தினம் வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,356 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் 1,012 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மற்றும் 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) பொது மக்களை பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி வேண்டியது மட்டுமின்றி நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
” கோவிட்-19 சிவப்பு பகுதியாக ஒரு இடம் மட்டுமே, இருந்தாலும் சிலாங்கூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிகேபியை பின்பற்றுங்கள். உங்கள் இடங்களை அடையாளம் காண எங்களின் தகவல்களை சரியாக பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது.