கோலா லம்பூர், ஏப்ரல் 25:
நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் மாநில எல்லைகளை தாண்டி வெளியேறும் அனுமதி, நாளை (26 ஏப்ரல் ) முதல் கெராக் மலேசியா எனும் பயன்பாட்டின் வழி விண்ணப்பம் செய்யலாம் என புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை பிரிவின் இயக்குனர் டத்தோ ஹூஸீர் முகமட் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் விவேக தொலைபேசி வழி பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அதன் விவரங்களை மேலும் சரிபார்க்க 29 ஏப்ரல் வரை காலக்கெடு விதித்திருப்பதாக கூறினார். விண்ணப்ப முடிவுகளை மே 1 முதல் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
” கெராக் மலேசியா எனும் பயன்பாட்டின் வழி அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும். ஆனாலும், இந்த பயன்பாடு இல்லாதவர்கள் நேரிடையாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று எழுத்துப் பூர்வமாக விண்ணப்பம் செய்யலாம்,” என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.
மே 1-இல் இருந்து 3 வரை பயணிக்க இருக்கும் அனைவரும் தங்களின் பயணங்களை சரியான முறையில் திட்டமிட வேண்டும், மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என நினைவு படுத்தினார். நெடுஞ்சாலைகளில் ஓய்வு எடுக்கும் மையங்களில் கழிவறை வசதியை தவிர மற்ற எந்த வசதியும் இல்லை எனவும் எண்ணெய் நிலையங்கள் காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என்று டத்தோ ஹூஸீர் தெளிவுபடுத்தினார்.