ஷா ஆலம், மே 2:
எதிர்வரும் மே 4-இல் தங்களது வணிகத்தை தொடங்கவிருக்கும் வியாபாரிகள் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்கேஎன்) வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) வெற்றிக்கு இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் தங்களது அமலாக்க அதிகாரிகளின் வழி கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர். அனைவரும் பிகேபிபி நடைமுறைகளை பின்பற்றி நடப்பதை இந்த அதிகாரிகள் உறுதி செய்வர். பிகேபிபி வெற்றிக்கு இது மிக முக்கியமான ஒன்று,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.