மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி) மீறியக் குற்றத்திற்காக 383 நபர்களை , மலேசிய அரச போலீஸ் படை (காவல்துறை) நேற்று கைது செய்துள்ளது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அவர்களில், 32 பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில், 351 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இரவு மனமகிழ் மைய நடவடிக்கையில் ஈடுப்பட்டதற்காக 328 பேரும், தொடுகை இடைவெளியைப் பின்பற்றுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் நிகழ்சியில் கலந்து கொண்டது மற்றும் எஸ்.ஓ.பி.-யை மீறியது ஆகியவற்றுக்காக 55 பேரும் கைதுச் செய்யப்பட்டதாக, டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பிகேபிபி-யின் எஸ்.ஓ.பி. முறையாக பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு, பி.டி.ஆர்.எம் தலைமையிலான பணிக்குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை 61,907 சோதனை நடவடிக்கைகளை, மேற்கொண்டது.
மற்றொரு நிலவரத்தில், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில், குடிநுழைவுக் குற்றத்திற்காக, 14 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாட்டிற்குள் அந்நிய நாட்டவர்கள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியாக, நாடு முழுவதும், மேற்கொள்ளப்பட்ட 65 ஓப்ஸ் பெந்தேங் சாலை தடுப்பு நடவடிக்கைகளில் 36, 001 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.