ஷா ஆலம், செப் 8- குறைந்த வருமானம் பெறுவோர் இணையம் வாயிலாக
வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக கைப்பேசி மற்றும் மடிகணினி வாங்குவதற்கு
மாநில அரசு கடனுதவித் திட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று
தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா
இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது வணிகர்கள் வியாபாரம் தொடர்பான பொருள்களை வாங்குவதற்கு
மட்டுமே சிறு தொழில்முனைவோர் கடனுதவித் திட்டத்தில் வாய்ப்பு
வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட வியாபாரிகள் இணையம் வாயிலாக வியாபாரம் செய்வதற்கு
ஏதுவாக கைப்பேசி அல்லது மடிக்கணினி வாங்குவதற்கான கடனுதவித்
திட்டத்தை ஏற்படுத்தித் தருவதற்கு காலம் கனிந்து விட்டது என்று அவர் கூறினார்.
கைப்பேசி அல்லது மடிக்கணினி இல்லாத காரணத்தால் அத்தரப்பினரால்
இணையம் வாயிலாக வியாபாரம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது என்று
அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர்
இதனைத் தெரிவித்தார்.