சிகிஞ்சான், அக் 17- தூய்மையும் அழகும் நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதன் வழி சிகிஞ்சான் நகரம் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என்று சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுய் லிம் கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்சனைக்கு முழுமையான தீர்வு ஏற்பட்டவுடன் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று அவர் சொன்னார். சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளில் தூய்மையை பேணுவது சுற்று வட்டார மக்களின் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்தவுடன் மேலும் அதிகமான சுற்றுப் பயணிகள் சிகிஞ்சான் பகுதிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுவதால் நடப்பு மேம்பாட்டு திட்டங்களோடு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர். சிகிஞ்சான் தொகுதி பசுமையும் தூய்மையும் சுபிட்சமும் நிறைந்த இடமாக விளங்கு வதை காண விரும்புகிறோம். ஆகையால், முகம் சுளிக்கும் வகையில் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இங்குள்ள சீன ஆலயம் ஒன்றிடம் 100 குப்பைத் தொட்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.