ஷா ஆலம் அக் 18 ;- இதுவரை ஒவ்வொரு நாளும் நாட்டில் பதிவாகிய கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையான 869 புதிய நோய் தொற்றினை இன்று சனிக்கிழமை நாடு பதிவு செய்துள்ளது கவலையளிப்பதாக உள்ளதாகச் சுகாதார இலாக்கா தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ டாக்டர் நோர் ஹசிம் அப்துல்லா தெரிவித்தார்.
அவை அனைத்தும் உள்ளூரிலிருந்து பரவியதாகும் என்ற அவர் அதில் 745 உள்நாட்டவர்களுக்கும் எஞ்சியவை இங்கு வாழும் அன்னியர்களுக்கும் தொற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சபா மாநிலம் தினசரி அதிகமான நோய் தொற்றினைத் தொடர்ந்து பதிவிட்டு வரும் வேளையில் சிலாங்கூர் 159 , கோலாலம்பூர் 15 மற்றும் புத்ரா ஜெயா 2 நோய் தொற்று சம்பவங்களைப் பதிவிட்டுள்ளன.
பினாங்கு மாநிலம் 189, கெடா மாநிலம் 38, சரவாக் 4, பேரா 4, திராங்கானு 3, ஜோகூர் 2, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா தலா ஒரு நோய் தொற்று சம்பவத்தையும் பதிவிட்டுள்ளன என்றார் அவர்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சனிக்கிழமை மத்தியம் 12 மணிவரை 302 பேர் குணமடைந்ததையும் சேர்த்து ஆக மொத்தம் 12561 நோயாளிகள் குணமடைந்து உள்ள வேளையில் 91 நோயாளிகள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருவதுடன், அவர்களில் 30 பேர் சுவாசக் கருவி உதவியுடன் உள்ளதாகவும் கூறினார்.
இன்று நடந்த 4 மரணச் சம்பவங்களையும் உள்ளடக்கிக் கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு மொத்தம் 180 உயிர்களை நாடு பறிகொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..