ஷா ஆலம், அக்- கோலக்கிள்ளான், கம்போங் தெலுக்கோங் பகுதியில் உள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் வடிகால் மற்றும் நீர்பாசனைத் துறை ஈடுபடவுள்ளது.
ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடல் பெருக்கை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோலக்கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி கூறினார்.
கடந்த மாதம் ஏற்பட்ட கடல் பெருக்கு காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வெள்ளப் பிரச்னைக்கு காரணத்தை கண்டறியும் பொருட்டு வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையுடன் இவ்வட்டார மக்கள் சந்திப்பு நடத்தினர். கடல் நீரின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் தடுப்பணைகளில் துவாரம் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
கடல் பெருக்கு ஏற்படும் சமயங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக கடலோரங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் மீது ஆய்வு மேற்கொள்ளும்படி கிள்ளான் நகராண்மைக் கழகத்தை அஸ்மிசாம் முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார்.