ஷா ஆலம், நவ17:- ஈபி.எப் எனப் படும் சேமநிதி வாரியம், இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் ஜ-சினார் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் வழி சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டத்தின் வழி உறுப்பினர்கள் அவர்களின் மொத்தச் சேமிப்பிலிருந்து 10 விழுக்காடு தொகை அல்லது 60 ஆயிரத்துக்கு மேற்போகாத ஒரு தொகையை இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.
உறுப்பினர்கள் தங்கள் சேமநிதி வாரிய முதல் கணக்கிலிருந்து அத்தொகையை ஆறு மாதத் தவணையில் பெறலாம். ஆனால், அவை ஒட்டு மொத்தமாக அன்றி மாத-மாதம் உறுப்பினர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் சேமநிதி வாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி துங்கு அலிசக்ரி ராஜாமுகமாட் அலயாஸ் கூறினார்.
இதில் உள்ள இன்னொரு கட்டுப்பாடு என்னவென்றால் ஏற்கனவே இந்தக் கணக்கிலிருந்து பணத்தை மீட்டவர்கள் மீண்டும் இம்முறை பணம் மீட்க, முன்பு எடுத்த தொகையை ஈ.பி.எப் கணக்கில் மீண்டும் வரவு செய்ய வேண்டும்..
இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தக் திட்டம் அமலுக்கு வரும் என்ற அவர், அது கோவிட் 19 நோய்த்தொற்று கால நடமாட கட்டுப்பாட்டினால் வேலை இழந்தவர்கள் மற்றும் தற்காலிகமாக வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது என்றார் அவர் .