ஷா ஆலம், டிச 3– மாநில மக்களிடையே முதலாவது சொந்த வீட்டைப் பெறும் கனவை நனவாக்க சிலாங்கூர் அரசு புதிய வீடமைப்பு கொள்கையை வரையவுள்ளது.
வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரர்களின் வாங்கும் திறன், அவர்களின் வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களை இந்த கொள்கை கவனத்தில் கொள்ளும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்த 64,072 பேரில் 30,793 பேருக்கு மட்டுமே வங்கிக் கடன் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆயினும் விண்ணப்பம் செய்தவர்களில் பாதிக்கும் குறைவானோருக்கு மட்டுமே வங்கி கடன் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அதிகமானோர் சொந்த வீடு பெறுவதற்கு ஏதுவாக சாத்தியமான வழிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது என்றார் அவர்.
சிலாங்கூர் கூ வீடுகள் 42,00 வெள்ளி முதல் 250,000 வெள்ளி வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.