கோம்பாக், டிச 13: கோவிட் -19 ல் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்க்கை படகைச் சீராக இயக்க உதவும் முயற்சிகளை மாநில அரசாங்கம் எடுத்துவர முக்கியக் காரணமாக இருப்பது இவ்வரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையே ஆகும் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், சிலாங்கூரில் தலைவர்களிடையே ஒருமைப்பாடு மற்றும் ஒருமித்தக் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது என்பதைக் கோவிட் -19 க்கு பிந்தைய காலம் நமக்குக் காட்டுகிறது.
” மக்கள் ஒரு நிலையற்ற அரசாங்கத்தை விரும்பவில்லை, அதனால்தான் நாங்கள் மக்களின் ஜனநாயக ஆணையை ஏற்று, அதற்கு மதிப்பளித்து ஒருமித்தக் கருத்துடன் செயல்பட்டு வருகிறோம் என்றார் அவர்.
“ஒரு நிலையற்ற அரசாங்கம் ஒருவருக்கொருவர் போட்டியையும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, அதனால் அதிருப்தியாளர்கள் அரசாங்கத்தை மாற்றத் தொடங்கும் போது மக்களுக்கு வீண் சிரமங்கள் வருகின்றன. சிலாங்கூரில் அந்த நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் இன்று தனது சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி விஜயத்தின் போது குறிப்பிட்டார்.
நாம் ஒற்றுமையான சிறந்த ஆட்சியை வழங்குவதாலேயே, கோவிட் 19 நோய் தொற்றுக்கு இலக்கான மக்களுக்கு உதவும் பொருட்டு 12.78 கோடி வெள்ளியில் மக்கள் பொருளாதார நலன் திட்டத்தை அறிவித்தோம் . கடந்த மார்ச் 20 ல் நாம் செய்த அந்த ஏற்பாடானது, நாட்டில் முதல் மாநிலமாக மட்டுமின்றிச் சிலாங்கூரே நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்கியது என்பதை மகிழ்வுடன் நாம் நினைவு கூறலாம் என்றார் அவர்.
ஏப்ரல் 1 ம் தேதி, சிலாங்கூர் கரிசனம்மிக்க பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பின் இரண்டாம் கட்டத்தை 27.25 மில்லியன் ரிங்கிட்டில் மாநில அரசு அறிவித்தது, அதன்பிறகு ஜூலை 13 ல் நடுத்தரக் காலப் பொருளாதார மீட்சித் திட்டமாக 260.14 மில்லியனை அறிவித்தது. இவை அனைத்தும் மாநிலத்தில் 3.5 மில்லியன் மக்களுக்குப் பயனளித்துள்ளது என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.