கோலாலம்பூர், ஜன 2– நாட்டிலுள்ள ஐந்து மாநிலங்களில் மோசமான வானிலை காரணமாக இன்று கனத்த மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் சபா ஆகியவையே மோசமான வானிலையால் பாதிக்கப்படும் மாநிலங்களாகும் என்று அத்துறை இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கை கூறியது.
பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக அடை மழை பெய்யும் என அது தெரிவித்தது.
ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட், பெந்தியான் மாவட்டங்களிலும் திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்கள் முழுவதிலும் கனத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கை மேலும் கூறியது.
கடுமையான வானிலை காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கும்படி பகாங் மாநிலத்தின் லிப்பிஸ், ஜெராண்டூட், மாரான், பெரா மாவட்ட மக்களையும் சபா மாநிலத்தின் துவாரான், ரானாவ், கோத்தா பெலுட், துலப்பிட், பெலுரான், சண்டகான், கூடாட் பகுதிகளில் வசிப்போரையும் வானிலை ஆய்வுத் துறை கேட்டுக் கொண்டது.