கோலாலம்பூர், ஜன 19- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகளின் வசதிக்காக பிளஸ் நிறுவனம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு மட்டுமின்றி நடப்பு போக்குவரத்து நிலவரங்களை அறிந்துகொள்வது மற்றும் பயணத்தின் போது இடர்பாடுகளை எதிர் நோக்கும் சமயத்தில் பிளஸ் ரோண்டா உதவியை நாடுவது போன்றவற்றுக்கும் இந்த செயலி பெரிதும் துணை புரியும். கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 380,000 வாகனமோட்டிகள் இதனை பதிவிறக்கம் செய்துள்ளதாக பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸமான் இஸ்மாயில் கூறினார். நெடுஞ்சாலையில் நெரிசல் மிகுந்த பகுதிகளைச் சித்தரிக்கும் கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவையும் இதன் மூலம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார். வாகனங்கள் பழுதடையும் சமயங்களில் வாகனமோட்டிகள் இந்த செயலியைப் பயன்படுத்தி SOS என்ற எழுத்தை பதிவிடுவதன் மூலம் பிளஸ் ரோண்டாவின் உதவியை பெற முடியும் என்றும் அவர் கூறினார். இதுமட்டுமின்றி, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்த வேண்டிய டோல் கட்டணம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள கால்குலேட்டர் வசதியும் நெடுஞ்சாலைகளின் ஓய்வு மையங்களில் உள்ள உணவகங்களில் உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான வசதியும் இந்த செயலியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.