ஷா ஆலம், ஜன 26- சிங்கப்பூரைப் போல் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத காரணத்தால் கோவிட்- 19 நோய் தொற்று அதிகரித்ததோடு நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கினை ஆற்றி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அரசாங்கத்தின் இந்நடவடிக்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.
அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதை அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமானால் அத்துறையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உதவியது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் நோய்த் தொற்று காணப்படுவது நான்கு மாதங்களுக்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் தொழிற்சாலைகள் எந்த தங்கு தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டதாக முக நூல் வழி நடைபெற்ற நேரலை நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. சிங்கப்பூரைப் போல் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மலேசியாவுக்கும் போதுமான நேரம் இருந்தது என்றார் அவர்.
பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்குப் பின்னர் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல்படுத்துவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக இரோச்சேம் எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய மலேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சபை கடந்த 23ஆம் தேதி தனது உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நோய்த் தொற்றுப் பரவலுக்கு உற்பத்தித் துறை முக்கிய காரணமாக உள்ளதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்று 22ஆம் தேதி நடைபெற்ற அந்த கூட்டத்தில் அனைத்துலக வாணிக மற்றும் தொழில்துறை அமைச்சு கூறியதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.