ஷா ஆலம், ஜன 27- சுத்திகரிக்கப்பட்ட நீர் எந்த பயனுமின்றி வீணாவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இவ்வாண்டு 29 கோடியே 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. கடந்தாண்டில் இதே நோக்கத்திற்காக 25 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார். இவ்வாண்டிற்கான ஒதுக்கீட்டில் 17 கோடி வெள்ளி பழைய குழாய்களை மாற்றுவதற்கும் 16 கோடி வெள்ளி பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். கடந்தாண்டில் 29.7 விழுக்காடாக இருந்த பயனற்று போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவை இவ்வாண்டில் சராசரி 28.6 விழுக்காடாக குறைப்பதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போதிலும் தேசிய நீர் சேவை ஆணையம் நிர்ணயித்த 29.2 விழுக்காட்டை விட கூடுதலான அடைவு நிலையை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றார் அவர். வீணாகும் நீரின் அளவை வரும் 2025 ஆம் ஆண்டில் 25 விழுக்காடாகவும் 2049 ஆம் 15 விழுக்காடாகவும் குறைக்க தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.