NATIONALSELANGORSMART SELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க செலங்கா-மைசெஜாத்ரா இடையை தரவு பரிமாற்றம் அவசியம்

ஷா ஆலம், பிப் 2- கோவிட்-19 பெருந்தொற்றை குறிப்பாக புதிய தொற்று மையங்களின் உருவாக்கத்தை விரைவாக கண்டறிவதற்குரிய வழிமுறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள வழி முறைகள் நோய்ப்பரவல் மீதுதான் முக்கிய கவனம் செலுத்துகிறதே தவிர அந்நோய்  மக்களிடையே பரவுவதற்கு முன்பாக அதன் தொடர்பை துண்டிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று அவர் சொன்னார்.

நாம் தற்போது எடுக்க வேண்டிய அவசரமான மற்றும் அவசியமான நடவடிக்கை என்னவென்றால் செலங்கா மற்றும் மைசெஜாத்ரா செயலிகளை ஒருங்கிணைப்பது அல்லது தரவுகளை பரிமாறிக் கொள்வதாகும் என்றார் அவர்.

நோய்த் தொற்றை விரைவாக கண்டறிவதற்கான வழி முறைகள் நிச்சயம் இருக்கும். இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவுடன் விவாதிக்கவுள்ளேன் என்றார் அவர்.

நேற்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘கோவிட்-19 நோய்த் தொற்றின் அபரிமித அதிகரிப்பை கையாள்வதில் சிலாங்கூரின் வியூகம்‘ எனும் தலைப்பிலான நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆகக்கடைசி தகவல்கள் அல்லது தரவுகளை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் அவர் மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோயாளிகள் சுய காண்காணிப்பை மேற்கொள்வதில் உதவுவதற்கு ஏதுவாக செலங்கா செயலியின் செயல் திறன் மேம்படுத்தப்படும் என்று மந்திரி புசார் கடந்த மாதம் கூறியிருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


Pengarang :