பந்திங், பிப் 6- சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டத்தின் கீழ் (பி.டி.ஆர்.எஸ்.) அனுபவமிக்க ஆசிரியர்கள் வழங்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அணுகுமுறைகள் இம்மாத இறுதியில் எஸ்.பி.எம். தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
Eptrs.my எனும் அகப்பக்கத்தில் காணொளி வழி பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் கையாளும் வியூகங்கள் நடப்பு தேர்வு முறைக்கு இணையானதாகவும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறையை எளிதாக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக முகமது இக்வான் ஆடாம் ஆஸா (வயது 18) என்ற மாணவர் கூறினார்.
இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பாடங்களை மீள்பார்வை செய்வதற்கு வழிகாட்டி புத்தகங்களை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. எனினும் அப்புத்தகங்களில் உள்ள தகவல்கள் தெளிவற்றதாக இருந்ததால் மேலும் விளக்கம் பெற மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது என்றார் அவர்.
இந்த அகப்பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை சற்று எளிதாகி விட்டதாக அவர் சொன்னார்.
பாடங்களை எளிதாக புரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை இந்த அகப்பக்கம் உருவாக்கியுள்ளதோடு நமது கருத்துக்களை பதிவிடுவதற்குரிய வாய்ப்பினையும் இது வழங்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.