SELANGORWANITA & KEBAJIKAN

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங் தொகுதி சார்பில் நிதியுதவி

ஆலம், பிப் 14- இங்குள்ள கம்போங் புக்கிட்  லஞ்சோங் பகுதியில் வசிக்கும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட எழுவருக்கு கோத்தா கெமுனிங்  சட்டமன்றத் தொகுதி சார்பில் 3,500 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

சிகிச்சை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் அந்த எழுவருக்கும் தலா 500 வெள்ளிக்கான காசோலை வழங்கப்பட்டதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

சிறுநீரக செயலிழப்பு நான்காம் கட்ட நிலையில் உள்ளவர்கள், முடத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு காரணமாக கால்களை இழந்தவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வேலையும் வருமானமும் இல்லாத நிலையில் அவர்களின் வாழ்க்கை வறுமை நிறைந்ததாக காணப்படுகிறது. அவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இந்த உதவியை வழங்க முன்வந்தோம் என்றார் அவர்.

ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் முகமது தர்மிஸி லாஸிம், கணபதிராவ் சார்பில் இந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார்.

 

 


Pengarang :