SAINS & INOVASISELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கிள்ளான்-பெ.ஜெயாவுக்கும் விரிவாக்கம்

ஷா ஆலம், பிப் 18- சிலாங்கூர் மாநில அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கிள்ளான்  மற்றும் பெட்டாலிங் ஜெயாவுக்கும் விரிவாக்கம் காணவுள்ளது.

அச்சோதனை இயக்கம் வியாழக்கிழமை கிள்ளானிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலும் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் சமூக விவகார அதிகாரி டாக்டர் நுருள் சோலிஹானி ஹசான்  கூறினார்.

மாநிலத்தில்  கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் சில மாவட்டங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களாக உள்ளதையும் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

ஆகவே, சுற்றுவட்டார பொதுமக்களும் நோய்த் தொற்றுக்கான சாத்தியம் அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்த சோதனையில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார் அவர்.

இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்கள் செல்கேர் முகநூல் வாயிலாக அவ்வப்போது வெளியிடப்படும். இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பொதுமக்கள் http://sreening.selangkah.my வாயிலாக முன்பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் மேலும் சொன்னார்.

பண்டமாரான் ஜெயாவிலுள்ள பல்நோக்கு மண்டபத்தில் வியாழக்கிழமை  காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரையிலும் இந்த கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடைபெறும் என்று டாக்டர் நுருள் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள எம்.பி,எஸ்.ஏ. மண்டபத்திலும் ஞாயிற்றுக்கிழமை பிஜேஎஸ் 6, கம்போங் லிண்டோங்கானில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மண்டபத்திலும் இந்த  பரிசோதனை இயக்கம் நடத்தப்படும் என்றார் அவர்.


Pengarang :