சிப்பாங், பிப் 27– சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவிக் கோவிட்-19 தடுப்பூசிகள் இன்று காலை மலேசியா வந்து சேர்ந்தது. பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் முதல் கட்டமாக மலேசியா வந்தடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் ஒரு வகை தடுப்பூசியை நாடு பெற்றுள்ளது.
குளிர்பதன கொள்கலனில் வைக்கப்பட்ட அந்த 200 லிட்டர் தடுப்பூசி மருந்து மலேசியன் ஏர்லைன்சின் ஏர்பஸ் 330-300 ரக விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து இன்று காலை 9.00 மணியளவில் சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்த்து சேர்ந்தது.
சரக்கு விமானமாக மாற்றப்பட்ட அந்த பயணிகள் விமானம் அந்த தடுப்பூசியைப் பெறுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணி 7.05க்கு இங்கிருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்டது.
அந்த 200 லிட்டர் திரவமய மருந்தைக் கொண்டு மூன்று லட்சம் டோஸ் தடுப்பூசிகளை உருவாக்க முடியும்.
இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன், தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் மற்றும் மலேசியாவுக்கான சீனத் ஊயாங் யுஜிங் ஆகியோரும் விமான நிலையம் வந்திருந்தனர்.