கோலாலம்பூர், பிப் 27– கடந்த 2020ஆம் ஆண்டில் நடவடிக்கை மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஊழியர் சேம நிதி வாரியம் (இ.பி.எஃப்.) மரபு ரீதியான சேமிப்புக்கு 5.2 விழுக்காட்டு லாப ஈவை அறிவித்துள்ளது. இதன் வழி அந்த வாரியம் 4,288 கோடி வெள்ளியை தனது உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கும்.
ஷரியா சேமிப்புக்கு 4.9 விழுக்காட்டு லாபஈவை அறிவித்துள்ள அந்த ஓய்வூதிய நிதி வாரியம் இந்த லாபஈவு மொத்தம் 476 கோடி வெள்ளியை உள்ளடக்கியிருக்கும் எனக் கூறியது.
உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 2020ஆம் ஆண்டிற்கான மொத்த லாப ஈவுத் தொகையின் மதிப்பு 4,764 கோடி வெள்ளியாகும் என அறிக்கை ஒன்றில் இ.பி.எஃப் தெரிவித்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்ட லாப ஈவுத் தொகையின் சராசரி அளவைப் பொறுத்த வரை மரபுரீதியான சேமிப்பிற்கான லாபஈவு 4.62 விழுக்காடாகவும் ஷரியா சேமிப்பிற்கான லாபஈவு 4.32 விழுக்காடாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக 2.00 விழுக்காட்டிற்கும் குறையாத லாபு ஈவை வழங்கியதன் வழி நிர்ணயிக்கப்பட்ட வியூக இலக்கை இ.பி.எஃப். கடந்துவிட்டது என அந்த அறிக்கை மேலும் கூறியது.
கோவிட்-19 பரவல் ஏற்பட்ட எதிர்பாராத சூழல் மற்றும் பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய இரட்டை நெருக்கடிகளை உலகம் எதிர்நோக்கிய விந்தையான சூழ்லையிலும் கடந்த 2020ஆம் ஆண்டில் இ.பி.எஃப். சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்தது என்றும் அது குறிப்பிட்டது.