கோம்பா, மார்ச் 11- கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூரிலுள்ள சுமார் எட்டாயிரம் பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஆறு மாத காலத்திற்கு உணவுக் கூடைகளைப் பெறுவர்.
ஸ்பாட் எனப்படும் பொது தரை போக்குவரத்து ஆணையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் அங்கத்துவம் பெற்றுள்ள 7,900 பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டத்திற்கு மேலும் அதிகமானோர் விண்ணப்பிக்காத பட்சத்தில் இந்த உணவு உதவித் திட்டத்தை 10 முதல் 12 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரம் மீட்சி காணும் வரையில் நாம் வழங்கும் இந்த உணவு பொருள் சம்பந்தப்பட்டத் தரப்பினரின் பொருளாதார நெருக்கடியை ஓரளவு தீர்க்க உதவும் என்று அவர் சொன்னார்.
பத்து கேவ்ஸ், கம்போங் மிலாயுவில் நேற்று நடைபெற்ற பஸ் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வீடுமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமான இழப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த உணவு உதவித் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது. திட்டத்திற்காக 43 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.