ஷா ஆலம், மார்ச் 15– தங்கள் வசமுள்ள மறுசீரமைப்பு செய்யப்பட்ட பழைய கணினிகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளது.
மேலும் அதிகமான மாணவர்கள் குறிப்பாக வீடுகளில் கணினி இல்லாதவர்கள் இயங்கலை வாயிலாக பள்ளிகளில் கூடுதல் கல்வி வாய்ப்பினை பெறுவதற்கு இந்நடவடிக்கை துணை புரியும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
பயன்படுத்தும் நிலையில் உள்ள பழைய கணினிகளை சேகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அந்த கணினிகளில் உள்ள சிறிய பழுதுகளை சரிசெய்தால் போதுமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கணினி மையங்களில் பயன்படுத்துவதற்கு அவை வழங்கப்படும். இத்திட்டம் சாத்தியமானால் அதிக மாணவர்கள் பயனடைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவில் 50 மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கணினிகளைப் பெற விரும்புவோர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.